சம்யுக்தா
பிரபல தெலுங்கு எழுத்தாளர் திருமதி யத்தனபூடி சுலோசனாராணி அவர்கள் எழுதிய சம்யுக்தா என்ற குறுநாவலுடன், மேலும் மூன்று குறுநாவல்கள் தமிழாக்கம் செய்யப்பட்டு அதே தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முன்பே கணவன் வேறு ஒரு பெண்ணை நேசித்திருக்கிறான் என்ற உண்மை தெரியும் போது ஒரு மனைவியின் மனதில் ஏற்படும் உணர்வுகளின் கொந்தளிப்பைக் கண்ணாடியில் காட்டுவது போல் தெளிவுபடுத்தும் குறுநாவல் சம்யுக்தா.
இளமையில் வறுமையை அனுபவித்துக் கொண்டிருந்த ஜோதி தாயுடன் பட்டணத்திற்கு வருகிறாள். அவள் வாழ்க்கையில் ஏற்படும் பல சுவையான திருப்பங்களை ஜோதி என்ற குறுநாவலில் காணலாம்.
கடவுளுக்கு அடுத்ததாக தாயைத்தான் எல்லோரும் போற்றுவார்கள். ஆனால் அந்தத் தாய் மகனை அளவுக்கு மீறி நேசித்தால்? அவனுடைய திருமண வாழ்க்கைக்குத் தடையாக இருந்தால்? அதுதான் பாசவலை.
சின்ன வயதிலேயே பெற்றோரை இழந்த கோபியும், ராதாவும் தாத்தாவின் ஆதரவில் வளர்கிறார்கள். தாத்தாவுக்கு, பேரனுக்கும் இடையில் எப்போதும் சண்டை. இருவரையும் சமாதானப்படுத்த முடியாமல் ராதா நலிந்து போகிறாள். தாத்தாவிடமிருந்து பணத்தை பெறுவதற்காக கோபி போட்ட திட்டம் ராதாவை பிரசாத்துடன் இணைக்கிறது. தாத்தாவும் பேரனும் என்ற குறுநாவல் தலைமுறைகளின் இடைவெளியை பிரதிபலிக்கிறது.