மௌனராகம்
திருமதி யத்தனபூடி சுலோசனாராணி அவர்கள் தெலுங்கில் எழுதிய அவ்யக்தம் என்ற நாவல் தமிழில் மௌனராகம் என்ற தலைப்பில் இசைக்கபட்டுள்ளது.
மகாபாரதக் கதையில் வரும் துரியோதனனும், கர்ணனும் நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள். அப்படிப்பட்ட நட்புக்கு எடுத்துக் காட்டாக விஜயும் ஆனந்தும் இந்த நாவலில் வலம் வருகிறார்கள்.
சின்ன வயதிலேயே பெற்றோரை இழந்த விஜயை தீட்சிதர் தன்னுடைய வீட்டுக்கு அழைத்து வருகிறார். பேரன் ஆனந்துக்குத் துணையாக இருப்பான் என்று எதிர்பார்த்தவருக்கு, ஆனந்த் தன்னைவிட விஜயிடம் அதிகம் அன்பு வைத்திருப்பது, அவ்விருவருக்கும் இடையில் பலமான நட்பு ஏற்படுவது கண்டு விஜயை வெறுக்கிறார். விஜய் தன்னுடைய பேரனை மிஞ்சிவிடுவானோ என்று பயப்படுகிறார். விஜயை வீட்டை விட்டு வெளியேற்ற அவர் செய்யும் முயற்சிகள் தோல்வியில் முடிகின்றன.
விஜய், ஹேமாவின் சந்திப்பு வித்தியாசமான சூழ்நிலையில் நிகழ்கிறது. ஹேமா விஜயின் தனித்தன்மையினால் ஈர்க்கப்படுகிறாள். விஜய் ஹேமாவை மனப்பூர்வமாக நேசித்த போதும் அவளைத் திருமணம் செய்து கொள்ள முடியாத நிலையில் இருக்கிறான்.
பேரனின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற தவிப்பில் நியாய அநியாயங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தீட்சிதர் சொத்து சேர்க்கிறார். ஹேமா ஆனந்துக்கு மனைவியாக வந்தால் அவனுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று திட்டம் போடுகிறார்.
ஆனந்த்... பெயருக்கு ஏற்றார்போல் சந்தோஷமாக இருப்பதோடு, மற்றவர்களும் மகழ்ச்சியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவன்.
ஹேமாவின் வாழ்க்கையில் பங்கு பெறப் போவது யார் என்ற புதிர் கடைசியில் விடுபடுகிறது.